இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (25) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் K.V. சமந்த வித்தியாரத்தன, அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்ததோடு, நாட்டின் தற்போது அரசியல், பொருளாதார நிலைமைகள் மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் உற்பத்தி, அதன் ஏற்றுமதி போன்றவற்றின் நிலைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், மலையக மக்களின் காணி உரிமை, வீட்டு திட்டம் பயனாளிகள் தெரிவு முறை, தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், தற்போது அரசு வறிய மாணவர்களுக்கான சத்துணவு வழங்குவது தொடர்பாகவும், தொடர்ச்சியாக அமெரிக்க அரசு இலங்கைக்கு உதவிகள் வழங்குவது சம்பந்தமாக நினைவு கூரப்பட்டது.
மலையக மக்களுக்கான உதவிகள், அவர்களுக்கான சேவைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், தற்போது இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மகிழ்ச்சியையும், திருப்தியும் தருவதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.