தேசிய சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை பேரப் பொருளாக்கும் அரசியல் போக்குக்கு முற்றுப்புள்ளி இடுவோம்!
23-07-2026, கறுப்பு ஜூலைப் படுகொலையின் 43 ஆம் ஆண்டு நினைவு-நிறைவு தினமாகும். இப்படுகொலை நிகழ்வு ஈழவிடுதலைப் புரட்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையும் புதிய பரிமாணமும் ஆகும்.
ஈழப்புரட்சியின் ஆயுதப் போராட்டம் உள் நாட்டு யுத்தமாகிய திருப்பு முனையும், இந்தியத் தலையீடு மூலம் பிராந்திய-சர்வதேசிய- தன்மை பெற்ற பரிமாணமும் இப் படுகொலையை ஒட்டியே உருவாகின.
உலக,பிராந்திய, உள்நாட்டு சூழல்கள் இன்று பெரிதும் மாறிவிட்டன.இன்றைய சூழலில் ஈழப் புரட்சியை தொடர கடந்து வந்த, குருதி வடித்த காலத்தின் படிப்பினைகள் இன்றியமையாதவை.
சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னால்;
1) உலக நாடுகள் அமெரிக்க முகாம், ரசிய முகாம் என இரு முகாம்களாக பிரிந்து இருந்தன. அணிசேராமை என்பது கூட ஏதோ ஒரு அளவில் பின் கதவால் அணி சேர்ந்துதான் இருந்தது.
2) இந்தியா அரசியல் ரீதியாக வெளிவிவகாரங்களில் ரசியாவைச் சார்ந்தும், பொருளாதார ரீதியாக பிரித்தானியா மற்றும் அமெரிக்காவைச் சார்ந்தும் இருந்தது. எனினும் பொதுவான ஏகாதிபத்திய நலன் சார்ந்த பிரச்சனைகளில் குறிப்பாக தொடர் காலனியப் பிரச்சனையில் கூட்டாக ஏகாதிபத்தியவாதிகளுக்கு சேவகம் செய்துவந்தது.இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியவாதிகளின் காவல் நாயாகவும், தலைமைத் தளபதியாகவும் விளங்கியது.
3) இதன்காரணமாக தேசிய ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட தொடர்காலனிய இலங்கை அரசைப் பாதுகாப்பது அதன் பொறுப்பும் கடமையுமாக இருந்தது. ( இந்திய இலங்கை ஒப்பந்தம் இதை சட்டபூர்வமாக்கியுள்ளது)
4) மேலும் இந்திய ஆளும் வர்க்கம் தரகுப் பெருமுதலாளித்துவ, பெரு நிலப்பிரபுத்துவ பிற்போக்கு வர்க்கமாகும். இதனால் அது தன் சொந்த நலன் என்ற வகையிலும் அகண்ட பாரத விரிவாதிக்க திட்டம் கொண்டது.
5) எனவே இலங்கையில் ஒரு தேசிய ஜனநாயகப் புரட்சி-(1983 இல் இது ஆயுதமேந்திய ஈழப்பிரிவினை-உள்நாட்டு-ப் போராக வெடித்தது) இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு அடிப்படையில் முரணானது. அதாவது கட்சி பேதமின்றி, இந்திய அரசின் வர்க்க நலனுக்கும் ஈழதேசிய விடுதலைப் புரட்சிக்கும் இடையிலான முரண்பாடு பகைமையானதாகும். இந்திய அரசு ஈழதேசிய விடுதலைப் புரட்சியின் எதிரி ஆகும்.
6) எண்பதுகளில் இலங்கையில் ஒரு கட்சி என்கிற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி ( United National Party-UNP) - முழுமையாக அமெரிக்க மேலை ஏகாதிபத்திய, வர்த்தகத் துறையில் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து முந்நிலையில் இருந்தது.
7) 83 ஜூலைப் படுகொலை பெருமளவிலான தமிழ் மக்களை பாக்கு நீரிணைக்கு அப்பால் தூக்கி வீசியபோது, ஜப்பானியச் சந்தையைக் கைப்பற்றுவதற்கான அரிய வாய்ப்பை இந்தியா கண்டது.இந்திரா கடித்த இந்த அப்பிள் பழத்துடன் தான், தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் `ஆதிப்பாவம்` ஆரம்பமானது!
8) இதற்குத் துணை போன தமிழக மாநிலத் தரகர்கள் இதை ``தொப்புள் கொடி உறவு `` என்றனர்!
9) இந்தத் தகாத உறவில் குறைமாதப் பயிற்சி முகாம்களில் இருந்து நூற்றுக்கணக்கான குயில் குஞ்சுகள் ஆயுதங்களோடு பொரித்து இலங்கைக்குள் நுழைந்தன.
10) இவ்வாறு `எல்லை தாண்டிய பயங்கரவாதம்`, ஜே.ஆர் அரசைப் பணியவைக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளில், றோ அமைப்பால் வழி நடத்தப்பட்டது.அப்பாவிச் சிங்கள மக்கள் மீது இராணுவ வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது.எல்லைப் புறத்தில் தமிழர் காணிகளில் பலவந்தமாக குடியேற்றப்பட்ட ஏழை எளிய வறிய சிங்கள விவசாயிகள் வெட்டிச் சரிக்கப்பட்டனர்.இவ்வாறு தான் ஜே.ஆர் அரசு பேச்சுவார்த்தைக்குப் பணிய வைக்கப்பட்டது.
11) 1983 ஜூலைப் படுகொலையை ஒட்டி `இந்தியாவைப் பயன்படுத்தி`, பங்களாதேஸ் போல ஒரு தமீழீழ தேசைப் படைக்கக் கிளம்பிய போராட்டக்காரர்களுக்கு, அவர்களது எண்ணத்துக்கு மாறாக தாம் இந்தியாவால் பயன்படுத்தப் படுகின்றோம் என்ற எண்ணம் ஒரு அரசியல் மதிப்பீடாக உருவாகவில்லை.
12) இவ்வாறு இந்தியா தலையிட்டபோதும், அதற்கு இனமானம் பேசிய தமிழக தரகர்கள் துணைபோன போதும், அவர்களது உதவியைப் பெற்றபோதும் அந்த உறவை ஒரு கோட்பாட்டு - ஒடுக்கப்படும் ஈழ தேசத்தின் பிரிவினைக்கான ஆயுதப் போராட்டத்தை அங்கீகரி- அடிப்படையில் அமைத்துக் கொள்ளவில்லை.வந்தவரை இலாபம் அல்லது அவர்களைப் ``பயன்படுத்துவது`` என்கிற வகையில் தன்னியல்புச் சந்தர்ப்பவாத வழியைக் கடைப்பிடித்தனர். கட்சிகளுக்கு ஏற்ற வகையில் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை மாற்றி வளைத்து திரித்து பேசி வந்தனர்.இவ்வாறு சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை ஒரு பேரப் பொருளாகக் கையாண்டனர்.
13) இதனால் 1985 திம்புப் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் நிர்ப்பந்தங்களுக்கு பணிய நேரிட்டது.புலிகள் தவிர ஏனையோர் ஆக இரண்டு ஆண்டுகள் `போராடிக் களைத்து` இந்தியக் கைக் கூலி ஐந்தாம் படை ஆகினர்.
இதற்கு முதற் காரணம் குட்டி முதலாளித்துவ வர்க்க இயல்பாகும். இரண்டாம் காரணம் இவ் அமைப்புகள் தனிநாட்டுக் கோரிக்கையை சமஸ்டிக் கட்சியிடமிருந்து அப்படியே கைமாற்றியதாகும்.மூன்றாம் காரணம் EPRLF போன்ற இடது சாரியம் சோசலிசம் பேசிய கட்சிகள், இந்திய திருத்தல்வாத கொம்யூனிஸ்ட்டுக்களிடம் அரசியல் போதனை பெற்றதாகும்.
Samaran கற்க: மா.லெ.தீர்மானம் (1983-டிசம்பர்)
1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம்:
1976 மே 14 ம் திகதி வட்டுக் கோட்டைத் தீர்மானம்
சமஸ்டிக் கட்சியின் தலைமை அருணாசலம்,இராமநாதன், போன்ற நிலப்பிரபுக்கள் வழி வந்த தரகு வர்க்கக் கட்சியாகும்.ஏகாதிபத்திய சார்பு கட்சியாகும். இதனால் தேசியப் புரட்சிக்கு எதிரானதும், இந்திய விரிவாதிக்கத்துக்கு சார்பானதுமான கட்சியாகும்.
1977 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றி, பொது ஜன வாக்கெடுப்பில் ஆதரவான மக்கள் தீர்ப்பைப் பெற்ற கட்சி, 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபையை இடைக்கால உடனடித் தீர்வு என்று கூறி ஏற்றுக் கொண்டது.1983 ஜுலைப் படுகொலை நடந்த போது தமிழ் நாட்டில் இந்திய அரசின் துணையில் தஞ்சம் புகுந்தது.1985 இல் திம்புக் கோரிக்கைக்குத் துரோகம் இழைத்து இந்தியாவுடன் இணைந்தது.1987 இல் மாகாணசபையுடனும் சட்டபூர்வ துப்பாக்கிகளுடனும் கால் பதித்தது.
1947 இல் சமஸ்டி (டட்லி செல்வா-பண்டா செல்வா ஒப்பந்தங்கள் சமஸ்டி அடிப்படையிலான சமரசங்களே-இந்த சமரசத் திட்டத்தின் அடிப்படையில்தான் சமஸ்டிக் கட்சி தமிழ் பேசும் மக்களிடையே ஐம்பது-அறுபதுகளில்,காந்திய வழியில் ஒரு சமூக இயக்கமாக மாறியது), 1977 இல் தமிழீழம், 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை,1985 இல் திம்பு கோரிக்கைக்கு துரோகம், 1987 இல் மாகாணசபை (13ம் திருத்தம்)..... 2009 இற்குப் பின்னால் ஏக்க ரட்டே மந்திர சபை.
குறுகத் தறித்த சமஸ்டி இயக்கத்தின் இந்த 80 ஆண்டு வரலாற்றில், `தமிழீழம்` விதி விலக்காக இடைச் சொருகலாக இணைந்திருப்பதை காணுவது கடினமல்ல.
உண்மையில் அவ்வாறுதான் நடந்தது.சமஸ்டி என்கிற அரசியல் கோரிக்கை சமரசவாதம் என்கிற அரசியல் போக்காகும். சமஸ்டிக் கட்சியின் வர்க்க அடித்தளம் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கூறுகளாக இருந்தாலும், அதனுடைய சமரசவாதம் அனைத்து சமூக வர்க்கங்களிடையேயும் உள்ள சமரசவாதக் கூறுகளை அணிதிரட்ட உதவியது. இவ்வாறுதான் சமஸ்டிக் கட்சி தமிழ் பேசும் மக்களிடையே ஒரு சமூக இயக்கமாக மாறியது.
ஆனால் புறவய நிலைமைகள் இதை அனுமதிக்கவில்லை. சமஸ்டிக் கட்சியின் சமரசவாதம் வரலாற்றுச் சக்கரத்தைப் பின் நோக்கி இழுக்கும் திசையில் பயணித்தது.சமரசவாதம் எதிர் நீச்சல் அடித்தது.
70 களில் ஏற்பட்ட உலக ஏகாதிபத்திய பொது நெருக்கடியின் காரணமாக தொடர் காலனிய இலங்கை அரசின் மீது இடி இறங்கியது.தேசியப் பகைமையை தூண்டி வளர்ப்பதன் மூலம் தனது அரசுமுறையைப் பாதுகாக்க சிங்கள ஆளும் வர்க்கங்கள் ஒன்று மாறி ஒன்று முயன்றன.
1972 அரசியல் யாப்பு, கல்வித் தரப்படுத்தல், சோனகர்களுக்கு எதிரான தாக்குதல், திட்டமிட்ட குடியேற்றம், தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை, தமிழ் இளைஞர்களின் கைது, சிறை, சித்திரவதை கூடவே சமஸ்டிக் கட்சியின் சட்ட மறுப்புப் போராட்டம் என்பன இக்காலத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.
சட்டமறுப்புப் போராட்டத்தோடு சமஸ்டிக் கட்சி வரலாற்றின் கைதி ஆனது.
கற்க: ஈழத்தில் வர்க்கப் போராட்டம் விற்பனையில்-பனுவல் On Line Book Sellers
இந்த இயக்கத்தில் 1978 பொதுத்தேர்தலில் முன்னின்று உழைத்த இளைஞர்களில் ஒரு பிரிவினரிடமிருந்து புதிய பாதை, புதிய தலைமை பற்றிய சிந்தனையும் கேள்விகளும் எழுந்தன.
இக்காலப் பகுதியில்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கம், அயர்லாந்து விடுதலை இயக்கம், விடுதலை, பிரிவினை, வட அயர்லாந்து, பங்களாதேஸ், ஈழம் (தமிழீழம்) என்கிற பொறிகள் தெறித்தன.எனினும் இவை முளைக்க முன்னமே கருக்கப்பட்டுவிட்டன.
மிக முக்கியமாக இது சமஸ்டிக் கட்சியைச் சாராமல் அதன் பலத்த எதிர்ப்பைச் சந்தித்து, அதற்கு சவாலாக உருவாகி வளர்ந்து வந்தது.ஈழ விடுதலை இயக்கம் இப்போது தான் தோன்றியது.
இவ்வாறு இனியும் தவிர்க்க இயலாத, தணிக்க இயலாத நிலை தோன்றிய போதுதான் சமஸ்டிக் கட்சி தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றியது. இது 1977 பொதுத் தேர்தலில் வெகுஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதிகப் பெரும்பான்மை வாக்குகளால் ஈழ தேச மக்களிடையே வெற்றிபெற்றது.
இந்தக் காரணத்தால் வெகு ஜன வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்பட்ட ஒரு தேசத்தின் முடிவை, அதே மக்களிடையேயான இன்னொரு வெகு ஜன வாக்கெடுப்பின் மூலம் அல்லாமல் அதை மாற்றமுடியாது.
அதுவரைக்கும் ஈழ தேசியப் பிரச்சனைக்கு தமிழீழமே தீர்வு.எங்களை ``என்ன பெயர் வைத்து நீங்கள் அழைத்தாலும்`` வேறெதுவும் தீர்வல்ல.
நிற்க.
இந்த வாக்கெடுப்பு முடிவை _ தேசத் தீர்ப்பை_ ஏற்பது என்பது ஒன்று. பிரிவினைக்காக முன் வைக்கப்பட்ட விளக்கங்களை, வியாக்கியானங்களை ஏற்பது என்பது வேறொன்று.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழீழப் பிரிவினைக் கோரிக்கைக்கு முன் வைக்கப்பட்ட தர்க்கங்கள் ஜனநாயகப் பண்பு கொண்டவை அல்ல. அவை ஆண்டபரம்பரை, இனத்துவப் பெருமை அடிப்படையில் அமைந்தவை. இதனால் பிரிவினைக்கான புறவய அவசியம் இல்லாது போனால் ஜனநாயக ரீதியாக இரண்டு தேசங்கள் ஐக்கியப் படவேண்டியதற்கான அவசியமோ நிபந்தனையோ வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இல்லை.மேலும் உப கண்டத்தில் ஜனநாயகப் புரட்சிகள் வெற்றி பெறுவதைப் பொறுத்து ஜனநாயகக் கூட்டாட்சியில் இணைவது குறித்த நிலைப்பாடும் இல்லை. (அற்ப தரகு முதலாளிய, குட்டி முதலாளிய வர்க்க சிந்தனையில் சர்வதேசியத்தை எதிர்பார்ப்பது குற்றம் தான்!)
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முதற் பந்தி-பிரகடனம்-கூறுவதாவது:
▶ 1976 மே 14ஆந் தேதியன்று (வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள) பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு, இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும் வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித் தேசிய இனமாகவுள்ளனரென, இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.
ஒரு தேசத்துக்கான-`` தேசிய இனம்``- வட்டுக்கோட்டைத் திர்மானத்தின் வரையறுப்பு விஞ்ஞானக் கேடான அபத்தமாகும். இதில் மிகவும் முக்கியமானது, '` எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம்`` ஆகும்!
இனி, மேலே விட்ட இடத்துக்கு வருவோம்...
' இதற்குக் காரணம் இவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை சமஸ்டிக் கட்சியிடமிருந்து கைமாற்றியதாகும்`, என்று மேலே கூறினோமே அது இது தான்.
இங்கேதான் சமரசத்துக்கான சந்தர்ப்பமும், சந்தர்ப்பவாதமும் உள்ளது.
தமிழீழம் ஆண்டபரம்பரைக்கான, அதாவது தமிழ் பேசும் தமிழருக்கு மட்டுமான, தனித்துவமான நாடு-அல்லது நிலப்பரப்பு- என்றால்
1) அது நித்தியமானது, நிரந்தரமானது, மாறாதது, `` தொடர்ந்திருக்கும்'`!
2) அதை ஆளும் உரிமை -இறைமை-தமிழ் பேசும் தமிழருக்கு மட்டுமானது, அதாவது அதன் ஆளும் வர்க்கங்களுக்கானது.
3) தமிழீழம் ஒன்றே தீர்வு, அதற்கே சண்டை என்றால் அது இல்லாத அல்லது இயலாத சூழ் நிலையில் சரணாகதி தீர்வாகிவிடும்.
ஏனெனில் சுயநிர்ணய உரிமை என்கிற ஜனநாயக நிலைப்பாடு இல்லாமல், இறைமை என்கிற ஆளும் வர்க்க நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், ஆளுவதற்கு தமிழீழம் இல்லையென்றால் இப்போதைக்கு அதைவிடக் குறைந்த, ஆளுவதற்கு முழு அதிகாரம் இல்லையென்றால் இப்போதைக்கு அதைவிடக் குறைந்த அதிகாரம் கொண்ட மாவட்ட சபையை, மாகாண சபையை, இடைக்கால அதிகார சபையை ஆள நினைப்பதில் என்ன குறை? தமிழனைத் தமிழன் தானே ஆளுகின்றான்!
4) இதைவிடக் கொடுமை என்னவென்றால் இந்த இனத்துவ தமிழீழ-தேசிய-த்துக்கு அந்தத் தேசத்தின் இதர மக்கள் சமூகங்களை அரவணைக்க, அணிதிரட்ட வேண்டிய அவசியம், திட்டம் தேவைப்படாது.
திம்புப் பேச்சுவார்த்தை:
1985 ஜூன்-ஜூலையில் பூட்டான் நாட்டின் தலைநகர் திம்புவில் திரை மறைவாக நடைபெற்றது. ஆயுதக் குழுக்களும், நாடாளமன்ற சமஸ்டிக் கட்சியும் ஈழ மக்கள் சார்பில் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு முன்வைத்தை தீர்மானத்தை அடியோடு நிராகரித்த பிரதிநிதிகள், தொடர்ந்து பேசுவதற்கான விருப்பத்தையும், அத்தைகய ஒரு தொடர் பேச்சுக்கு அடிப்படையாக அமைய வேண்டிய கோட்பாடுகளையும் இரத்தினச் சுருக்கமாக பேச்சுவார்த்தை முடிவில் வெளியிட்டனர்.இதுவே திம்புப் பிரகடனம் என அறியப்படுவது. ஒப்பீட்டில் ஈழ தேசியப் பிரச்சனையை அரசியல் ரீதியில் விஞ்ஞான முறையில் வரையறை செய்த ஒரே அறிக்கை இதுவே ஆகும். இதனால் தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம்-இறைமை-பேசப்படுகின்ற அளவுக்கு, திம்புக் கோரிக்கை-சுய நிர்ணய உரிமை- பேசப்படுவதில்லை!
மேலும் 1985 இல் இலங்கை அரசுக்கு இந்தக் கோரிக்கைகளை வைத்தவர்கள், 1987 இல் இதை இந்தியாவுக்கு வைக்கவில்லை.கை கட்டி வாய் பொத்தி மாகாண சபையை ஏற்றுக் கொண்டனர்!
அது வருமாறு:
The Thimpu Declaration
The Thimpu Talks - July/August 1985
Joint statement made by the Tamil Delegation on the concluding day of Phase I of the Thimpu talks on the 13th of July 1985 It is our considered view that any meaningful solution to the Tamil national question must be based on the following four cardinal principles:
The Thimbu Declaration
1) Recognition of the Tamils of Ceylon as a nation
2) Recognition of the existence of an identified homeland for the Tamils in Ceylon
3) Recognition of the right of self determination of the Tamil nation
4) Recognition of the right to citizenship and the fundamental rights of all Tamils in Ceylon
Different countries have fashioned different systems of governments to ensure these principles. We have demanded and struggled for an independent Tamil state as the answer to this problem arising out of the denial of these basic rights of our people. The proposals put forward by the Sri Lankan government delegation as their solution to this problem is totally unacceptable. Therefore we have rejected them as stated by us in our statement of the 12th of July 1985. However, in view of our earnest desire for peace, we are prepared to give consideration to any set of proposals, in keeping with the above mentioned principles, that the Sri Lankan Government may place before us.
இது இறைமையை அல்லாது ஈழ தேசிய சுயநிர்ணய உரிமையை கோருகின்றது என்பதைக் கண்டுபிடிக்க எதிரிகளுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அதுவும் அப்போது லெனினைப் படித்தறிந்த ஜே.ஆர்.ஜனாதிபதியாக இருந்தார். அவர் உடனடியாக ``இவர்கள் சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுகின்றார்கள், சுய நிர்ணய உரிமை என்பது பிரிவினை, பிரிவினை தவிர வேறெதுவும் இல்லை.`` என உறுதிபடக் கூறி மறுத்துவிட்டார்.இம்மாண்டி தேசங்களை கட்டாயமாக இணைத்து வைத்திருக்கும் மகா பாரதத்தைச் சொல்லவா வேண்டும். குறைந்தபட்ச கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுடன் பேசத் தயாராகும்படியான உத்தரவுடன் திம்புப் பேச்சுவார்த்தை இனிதே நிறைவேறியது.
இதைப் பகிரங்கமாகச் செய்வதற்கு யாரும் துணியவில்லை.தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர திம்புவில் கலந்து கொண்ட அனைவரும், திம்புக் கோரிக்கையைக் கைவிட்டு, இந்தியாவோடு கைகோர்த்து `புலி வேட்டையில்` இறங்கினர். இந்தச் சண்டாள சக உதிரங்களோடு போராட புலிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இவ்வாறுதான் ``சகோதரப் படுகொலைகள்`` நடந்தேறின. கூடவே புலிகளின் பங்குக்கு `கந்தன் கருணை` போன்ற கோரங்களும் நிகழ்ந்தன.
திம்புவில் இருந்த ஒற்றுமையைச் சிதைக்கும் இந்தியச் சதி நிறைவேறியது.
இன்று வரை இந்த இந்தியத் துரோகம் பகிரங்கப்படுத்தப்பட்டு அம்பலமாக்கப்படவில்லை.
சுய நிர்ணய உரிமையை பேரப் பொருளாக்கும் அரசியல் சந்தர்ப்பவாதம் 1985 இல் மீண்டும் புரட்சிக்கு பெருந்தீங்கிழைத்தது.
இந்திய இலங்கை ஒப்பந்தம்:
July 29-1987
Text: THE INDO-SRI LANKA ACCORD
குறைந்தபட்ச கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுடன் பேசத் தயாராகும் பணியில் சமஸ்டிக் கட்சி குறிப்பாக திருவாளர்.அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முன்னின்று உழைத்தார். இதன் இறுதி விளைவாக இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாகி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்திய ஆக்கிரமிப்பு இரணுவம் வட கிழக்கில் புலி வேட்டையில் இறங்கியது. எஞ்சியிருந்த தனது தோழர்களை முகாமுக்கு அருகில் தன் சிறகுக்குள் வைத்துக் கொண்டது. இந்தக் கைக் கூலி வீரர்களுக்கு தலைமைக் கூலியாக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரனின் `மண்டையன் குழு` விற்கு யாழ் அசோகா ஹோட்டலில் காரியாலயம் என்கிற சிறைக் கூடமும் சித்திரவதை முகாமும் இருந்தது. இது இன்றைக்கும் தண்டிக்கப்படவேண்டிய தேசத் துரோகக் குற்றமாகும்.
விடுதலைப் புலிகள் ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடி விரட்டி அடித்து வரலாறு படைத்தனர்.
எனினும் `` எம்முடன் கலந்தாலோசிக்காமல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் `` என்று சொன்னார்களே தவிர, ஈழ தேசத்தின் சுய நிர்ணய உரிமையை மீறி இலங்கையோடு இந்தியா தன்னிச்சையாக செய்து கொண்ட ஒப்பந்தம் என்று புலிகள் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
தியாகி திலீபனின் உண்ணாவிரதக் கோரிக்கையிலும் சுய நிர்ணய உரிமை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
இந்திய இராணுவத்தையும், அதன் கைக்கூலி ஆயுதக் கும்பலையும், மாகாண சபை முதலமைச்சரையும் விரட்டியடித்ததோடு, புலிகள் பேரியக்கமாக உருவாகினர். வன்னியின் பெரும் பகுதி அவர்களது முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.இலங்கை அரசு இதை ``விடுவிக்கப்படாத பிரதேசம்`` என அறிவித்து அழைத்தது. இங்கு புலிகள் தனிக்காட்டு ராஜா ஆனார்கள்.
இந்திய இராணுவம் விரட்டியடிக்கப்பட்டதும் புலிகள்-பிரேமதாசா பேச்சுவார்த்தை திரிகோணமலைத் துறைமுகத்துக்கு உரிமை கோரிய பிரச்சனையில் முறிவடைந்து மீண்டும் விடுதலை யுத்தம் வெடித்தது.
பேச்சுவார்த்தையில் சுய நிர்ணய உரிமையோ, பிரிவினைக்கு மாற்றான ஒரு தீர்வுக்கு பொது வாக்கெடுப்போ கோரிக்கையாக இங்கும் முன் வைக்கப்படவில்லை.
புலிகள் யுத்தத்தில் ஊன்றி நின்றனர். யுத்தம் முன்னேறியது.புலிகள் ஒரு நிரந்தர இராணுவம் ஆகினர்.புலிகளின் தளப் பிரதேசங்களில் அதிகார நிர்வாக முறைகள் ஏற்படுத்தப்பட்டு ஆட்சி செலுத்தப்பட்டுவந்தது. தொடர்ச்சியான போரில் இறுதியாக ஆனையிறவுப் பெரும் படைத்தளம் அடித்து நொருக்கப்பட்டு ``முன்னூறு ஆண்டுகால அடிமைத்தனத்துக்கு`` முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதாக பிரகடனம் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறக் கூடாது என்றும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லுமாறு அமெரிக்கா நேரடியாக அன்ரன் பாலசிங்கம் மூலம் கிளிநொச்சிக்கு தகவல் அனுப்பியது.மீண்டும் இந்தியப் படை தயாராக இருந்தது.
புலிகள் பேச்சுவார்த்தைக்கு உடன்பட நிர்ப்பந்திக்கப்பட்டனர். 2002 இல் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
புலிகள் உள் அகத்தில் நேசித்து வெளியே சொல்லாமல் மறைத்து வைத்திருந்த சந்தர்ப்பவாத சுய நிர்ணய உரிமை, அக சுய நிர்ணய உரிமையாக வெளிவந்தது. சுய நிர்ணய உரிமையை தேசத்தின் குரல் அகம், புறம் என்று இரண்டாகப் பிரித்தது. இந்த அக சுய நிர்ணய உரிமை என்பது சேர்ந்து வாழ்வதெற்கென்றும், புற சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்து வாழ்வதற்கானது என்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகாரபூர்வ தத்துவார்த்த தலைவர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் விளக்கம் அளித்தார்.``துரோகி`` கருணா இந்த அ.பா.வை தலை சிறந்த ராஜதந்திரி என்று கூறியதில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது! சேர்ந்து வாழ்வதற்கு விவாகரத்து உரிமை கோரும் தம்பதிகளை உலகில் எங்கேனும் நீங்கள் கண்டதுண்டா மக்காள்!
பேச்சுவார்த்தையில் ஈழமக்களின் அனுமதியின்றி, தமிழீழத்தைக் கைவிட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டமான, Internal Self Governing Authority (ISGA), தமிழில் கொச்சையாக `இடைக்கால அதிகார சபை` என்றழைக்கப்பட்ட நிர்வாக அலகு பரிசீலிக்கப்பட்டது.
இது மிக அதிக அதிகாரங்களைக் கோரியிருந்தது. சொல்லப் போனால் இந்தியாவின் (தமிழக) மாநிலத்துக்கு உள்ளதைக்காட்டிலும் அதிக அதிகாரங்கள் உடையதாக-காகிதத்தில்- இருந்தது. சமஸ்டிக் கட்சிக்கு புலிகளால் கொலை செய்யப்பட்ட நீலன் திருச்செல்வம் மாவட்ட அபிவிருத்தி சபை முறையை சட்ட ரீதியாக வரையறை செய்தது போல, புலிகளுக்கும் புலம்பெயர் தேசங்கள் உள்ளிட்ட சட்ட வல்லுன சபாபதிகள் இதை வரைந்து தள்ளினர்.
அதிகாரத்தின் அளவு எவ்வளவாக இருந்தாலும், தேசிய ஒடுக்குமுறைக்கு அதிகாரப் பகிர்வு என்பது ஒரு சீர் திருத்த முறையாகும். அதிக அதிகாரங்களைப் பெற்றுவிடுவதாலேயே ஒடுக்கப்படும் ஒரு தேசம் ஒடுக்கும் தேசத்துடன் சமநிலை பெற்றுவிட முடியாது.மேலும் சுய நிர்ணய உரிமை இல்லையென்றால் 30 ஆண்டுகாலம் இரத்தம் சிந்தி போராடிப் பெற்ற அதிகாரங்கள் பிறிதொரு சூழ் நிலையில் பறிக்கப்படுகின்றபோது அதை தடுப்பதற்கு உத்தரவாதம் இருக்காது. இந்திய இலங்கை ஒப்பந்தம்-13வது திருத்தம், இணைத்த வடக்கு கிழக்கு மாகாணங்களை JVP ஒரு வழக்கு வைத்து மீண்டும் பிரித்துவிடவில்லையா?!
விடுதலைப் புலிகள் இராணுவ அமைப்பாக மட்டுமல்ல, அரசியல் அமைப்பாகவும் இல்லாத இன்றைய சூழ் நிலையில் அதை மீண்டும் இணைக்க முடியுமா? அப்போதே தற்காலிகமாக இணைத்து நாடளாவிய வாக்கெடுப்புக் கோரிய இந்தியா இப்போது உதவுமா?
2002 பேச்சுவார்த்தையில் சுய நிர்ணய உரிமையைப் பேரப் பொருளாக்கிய சந்தர்ப்பவாதம் ஆனந்தபுர படுகொலையில் முடிந்தது.
அரசியலில் சந்தர்ப்பவாதம் என்பது தற்கொலை தவிர வேறெதுவும் இல்லை.
சுய நிர்ணய உரிமையின் நோக்கு நிலையில் ஈழப் புரட்சியின் இதுவரைகால வரலாறு என்பது,சுய நிர்ணய உரிமையைப் பேரப் பொருளாக்கிய அரசியல் சந்தர்ப்பவாதத்தின் வரலாறே ஆகும்.
ஆயுதப் போராட்டத்தின் துரித எழுச்சிக்கும், அதல பாதாள வீழ்ச்சிக்கும் இதுவே காரணம்.
1983 ஜூலைப் படுகொலையின் 43ஆம் ஆண்டு நினைவாக நாம் அறை கூவுவதாவது:
சுயநிர்ணய உரிமையைப் பேரப் பொருளாக்கும் சமரசவாத,சந்தர்ப்பவாத, சரணாகதிப் போக்குக்கு முற்றுப் புள்ளி இடுவோம்.
நடைமுறையில் இதன் பொருள் இலங்கை அரசியல் அமைப்பின் ஆறாவது திருத்தத்தை நீக்கப் போராடுவதே ஆகும்.
புரட்சிப் பாதையில் புதிய ஈழ விடுதலையை வென்றெடுப்போம்!
புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!
பின்வரும் முழக்கங்களுக்காகப் போராட ஒன்று சேருவோம்.
அனுரா ஆட்சியே அந்நிய ஆபத்திலிருந்து நாட்டைக் காக்க, இலங்கை மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தத்தை நீக்கு!
ஏகாதிபத்திய அமெரிக்காவே, விரிவாதிக்க இந்தியாவே திரிகோணமலையில் கை வையாதே!
அடுத்த ஆட்சிக் கவிழ்ப்புக்குத் திட்டமிடாதே!
1) மூன்றாம் ஏகாதிபத்திய பொது நெருக்கடிக்கு உலக யுத்த மறு பங்கீடு மூலம் தீர்வுகாண முயலும் போர் தயாரிப்புகளை முறியடிப்போம்!
2) நேற்றோ படை விரிவாக்கம், ஐரோப்பிய படை உருவாக்கம், இராணுவச் செலவின அதிகரிப்பு மற்றும் படைப்பெருக்கம் ஆகியவற்றை எதிர்ப்போம்!
உலகெங்கும் வியாபித்துள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் கலைக்கப் போராடுவோம்!
3) உலகளாவிய ஏகாதிபத்திய,பாசிச எதிர்ப்பியக்கத்துடன் ஒன்றிணைவோம்!
4) ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான பிராந்திய விரிவாதிக்க அரசுகள், உலகப் போருக்கு தம் நாட்டு உழைக்கும் மக்களையும்,அண்டை அயல் நாடுகளையும் தயார்செய்து, யுத்தத்துக்குள் தள்ளுவதை முறியடிப்போம்!
5) இணைக்கப்படாத இந்திய மாநிலமாக இலங்கையை ஆக்கும் இந்திய விரிவாதிக்கத்தை தோற்கடிப்போம்!
ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டங்களை அம்பலப்படுத்துவோம்!
6) தேர்தற் பாதையை நிராகரிப்போம், புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!
7) ஆறாவது திருத்தம், பயங்கரவாதச் சட்டம், மற்றும் பாசிசக் கறுப்புச் சட்டங்களை நிராகரிப்போம்!
8) ஈழப்பிரிவினைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!
9) ஒடுக்கும் சிங்கள தேசத்தின், தேசிய ஜனநாயகப் போராட்டங்களோடு ஒன்றுபடுவோம்!
10) Trump இன் சிலுவைப் பாசிசம், நெத்தனியாகுவின் சியோனிசப் பாசிசம் ஒழிக!
11) தேசபக்த ஈரான் போர் வெல்க! மேற்கு ஆசியாவில் அமெரிக்கத் தளங்கள் தகர்க!
12) பாசிச இஸ்ரேல் அரசு ஒழிக! ஜனநாயக ஓரரசுப் பாலஸ்தீனம் எழுக!
இறுதி வெற்றி ஈழமக்களுக்கே.
புதிய ஈழப் புரட்சியாளர்.
21-07-2026
